Monday, February 14, 2011

யுவனின் "மணற்கேணி"

"யுவன் சந்திரசேகரையும் கதைசொல்லி என்றே சொல்ல வேண்டும். கதைசொல்லிகள் எப்போதுமே சொல்லும் உற்சாகத்தில் ஆழ்ந்து போகிறவர்கள். நுண்ணிய அகத்தைவிட அழகிய புறங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள். செறிவை விட சரளத்தை சாதிப்பவர்கள். எத்தனை தூரம் இயல்பாக அவர்களின் எழுத்து நிகழ்கிறதோ அத்தனை தூரம் அவை சிறந்த கலைப்படைப்பாக ஆகின்றன. யுவன் சந்திரசேகரையும் அவ்வகையில் தயக்கமில்லாமல் சேர்க்கலாம்."

- ஜெமோ



யுவனின் எழுத்துக்களில் விரியும் மாய வெளியை வாசித்து உணர்ந்துவிட்டால் அதிலிருந்து மீள்வது எளிதல்ல.புனைவின் உச்சம் என நான் கருதும் குள்ள சித்தன் சரித்திரத்தில் கிடைத்தது யுவனின் முதல் அறிமுகம்.ஒளி விலகல்,ஏற்கனவே,பகடையாட்டம் என தொடர்ந்து வாசித்த யுவனின் படைப்புகள் தந்து சென்ற அனுபவத்தை வார்த்தைகளில் சொல்ல தெரியவில்லை...ம்ம்....மாயவெளிப் பயணம் என கொள்ளலாம்.மணற்கேணி இவற்றிற்கு மாறான தொகுப்பு.கதையா, கட்டுரையா,சுயசரிதையா என்ற கேள்விகளுக்குள் அடங்காது எல்லாமுமாய் உள்ளது.

"ஒரு மாபெரும் மரத்தையும் அதன் அடித்திண்டாக அமைந்த சிமென்ட்டுத் திண்ணையையும் ,நன்கு விளைந்த ஐந்து மனித உருவங்களையும் ஒரு சின்னஞ்சிறு நெஞ்சுக்குள் சுமப்பது எளிதா என்ன?இவற்றின் மொத்த எடையை விட,ஒரே ஒரு கோணல் வகிட்டின் எடை இன்னும் அதிகம்.."

வாசிக்கும் புத்தகத்தில் பிடித்த வரிகளை கோடிட்டு வைப்பது வழக்கம்.மாறாய் இத்தொகுப்பில் பிடித்த வரிகள் வரும் பக்கத்தின் நுனியை மடித்து வைத்து கொண்டே வந்ததில்...அனேகமாய் எல்லா பக்கங்களும் மடிப்பில் இருந்து தப்பவில்லை என வாசித்து முடித்ததும் அறிந்தேன். வாழ்வனுபவங்களை சுவாரஸ்யம் கூட்டி,எளிமையான வார்த்தைகள் கொண்டு விவரிக்கும் 100 குறுங்கதைகளின் தொகுப்பு மணற்கேணி.

"மனநிலை பிறழ்வு என்றெல்லாம் எதுவும் கிடையாது.மரபணு வழியாகவும்,சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவும் ஒவ்வொரு தனிமனமும் ஒரு ஸ்திதிக்கு வந்து சேர்க்கிறது.அதை சரி என்றும் தவறு என்றும் நிர்ணயிப்பதற்கு பிறருக்கு அதிகாரம் கிடையாது.உடல் ஊனமுற்றவர்களுடன் சகஜமாக கோ-எக்சிஸ்ட் பண்ண கற்று கொண்டுவிட்ட சமூகத்துக்கு மாற்று மனநிலையாளர்களுடன் வசிப்பது எப்படி என்று இன்னும் தெரியவில்லை............."

யுவனின் பிரதியாய் கிருஷ்ணன் என்னும் கதாபாத்திரத்தின் வழியே,கடந்து வந்த மனிதர்களை குறித்த கூர்மையான அவதானிப்பை முன்வைத்து சொல்லப்படும் கதைகள்.சொல் வித்தைகள் எதுவும் இன்றி எளிமையான சம்பவங்களின் மூலம் அம்மனிதர்களின் ஊடே நாமும் நடமாட முடிகின்றது. இஸ்மாயில், ரவி, அனுராதா, விசாலாட்சி,தபால்காரர் சுப்பிரமணியம்,தாயம்மா பாட்டி, வேங்கோபராவ், பாண்டியன் எக்ஸ்ப்ரஸ்ஸில் சந்திக்க நேரிடும் போலீஸ்காரர், எதிரியாகி போன ஜப்பானிய நண்பன் ஒருவன்,மலாவி தேசத்து மாணவன்,பெயர் குறிப்பிடப்படாத காதலி என உயிர் பெற்று உலவும் மனிதர்கள் அநேகம்.

குறிப்பாய் வங்காள விவசாய கிராமத்தில், இரவொன்றில் சந்திக்க நேரிடும் அக்கிழவர் ..வார்த்தைகள் அற்று அவரோடு நிகழ்ந்த உரையாடல் என நீளும் அக்கதை யுவன் பாணியிலான புனைவாக இருக்க கூடும் முடிவு செய்து கொண்டேன்.இத்தொகுப்பில் வரும் கீழ் உள்ள வரிகள் என் போன்றவர்களுக்கு தான் போல....

"கடந்த சில வருடங்களில் எனக்கென்று உருவாகி இருக்கும் வாசகர்களில் பலரும்,நான் சொல்லும் நிஜமான செய்திகளில் கூட புனைவின் நெடியை நுகரும் வல்லமை கொண்டவர்கள்"




அப்பாவை ஆதர்ச நாயகனாய் கொள்ளாதோர் யாரிங்கே? தந்தையை குறித்தான யுவனின் தொடர்ச்சியான குறிப்புகள் அளப்பரிய பிரியத்தை சொல்லுபவை.இத்தொகுப்பில் பல கதைகள் தந்தையோடு கரட்டுப்பட்டியில் கழித்த நாட்களை பற்றி பேசுபவை.நடுத்தர வாழ்வின் சிக்கல்கள் உறவுகளை முன்வைத்து தொடரும் சங்கடங்கள்... சமநிலையை பாதிக்கும் எல்லா சம்பவங்களுமே எல்லாருக்கும் பொதுவானவையே.முடிந்த வரை இவை யாவும் கழிவிரக்க மனநிலையில் இருந்து விலகி பகடி கூட்டியே முன்வைக்கப்படுகின்றன.யுவனிற்கு கைகூடும் பகடி இங்கு அரிதாய் காணக்கிடைப்பது..ஒரு கதை இவ்வாறாக தொடங்குகின்றது.

"மகாவாக்கியங்களை இன்ன சந்தர்ப்பத்தில் இன்னார் உதிர்ப்பார் என்று யூகிக்க இயலாது.முந்தைய வாக்கியத்தில் ஒரு சிறு மிரட்டல் இருக்கிறதல்லவா?ஒன்றுமில்லை,இந்த பத்தியை ஒரு கனமான வாக்கியத்துடன் தொடங்க ஆசையாய் இருந்தது.தொடங்கி விட்டேன்.அதற்கு மேல ஒன்றுமில்லை."


சோழவந்தான்,கரட்டுப்பட்டி தொடங்கி.. தல்லாகுளம், கோரிப்பாளையம்,சிம்மக்கல்,ஜெய்கிந்தபுரம்,குரு தியேட்டர்,காலேஜ் ஹவுஸ் என மதுரை நகரின் ஊடே பயணித்து சென்னையில் முடிவற்று தொடர்ந்து கொண்டிருக்கும் பயணம்... முன்னும் பின்னுமாய் கலைத்து போடப்பட்டுள்ள சம்பவங்கள்..முரணான குணாதிசியங்கள் கொண்ட மனிதர்கள்... கொண்ட இத்தொகுப்பு கலைவையான மனநிலையை தந்தது. கால ஓட்டத்தில்,முற்றிலுமாய் தொடர்பு துண்டிக்கப்பட்ட சில முகங்களை மீண்டும் நினைவிற்கு கொண்டு வர முயற்சி செய்ய தூண்டுவதே இத்தொகுப்பின் வெற்றி.

வெளியீடு - உயிர்மை

Wednesday, February 2, 2011

Yesterday (2004 ) - THE MOTHER


நாயகியின் பெயரே yesterday.தந்தை தனக்கு yesterday என பெயரிட்டதை குறித்தான அவளின் சிறு விளக்கம், தன் மகளுக்கு அவள் Beauty என பெயரிட்டுள்ளதை நியாயபடுத்த போதுமானது.தூரத்து நகரமொன்றில் வேலை செய்யும் கணவனின் வரவை எதிர் நோக்கி,ஏழு வயது மகளுடன் அமைதியாய் கழியும் நாட்கள் அவளுக்கானவை.தாயும் மகளும் பேசிக்கொள்ளும் காட்சிகள் கொள்ளை அழகு.."நமக்கு ஏன் சிறகுகள் இல்லை...பறவையை போல..வேகமாய் உயரமாய் சென்றிட..","ஓடை நீரானது நிலத்தில் இருந்து மலைக்கு செல்லாதது ஏன்.......?" என சிறுபிள்ளையின் வியப்பும்,கேள்விகளும் நிறைந்த உலகினுக்குள் மலர்ந்த சிரிப்புடன் இவளும் பயணிக்கும் தருணங்கள்...உன்னதம்.

அழகும்,அமைதியும் நிறைந்த கிராமம்,அவ்வூரின் பள்ளிக்கு புதிதாய் வரும் ஆசிரியை..தாய் மற்றும் மகளின் பேரன்பிற்குரிய தோழியாய் மாறிப்போவது,குழாய் அடியில் சந்திக்கும் பெண்களின் வம்பு பேச்சுக்கள்,Yesterday க்கு நிகழும் எதிர்பாரா நிலையை அக்கிராமத்தினர் எடுத்துக்கொள்ளும் விதம்,கிராமங்களுக்கு அரசாங்கம் மறுத்தலிக்கும் மோசமான மருத்துவ வசதிகள் என யாவும் வெகு இயல்பாக படமாக்கப்பட்டுள்ளன.

ஏதோ ஒரு நோயின் அறிகுறிகளை கொண்டு,Yesterday அவதிப்படுவது சலனமில்லாமல் முதல் காட்சியில் இருந்தே தெரிவிக்கப்படுகின்றது.மெல்ல மெல்ல வீரியத்தை உணரும் பொழுது..நிலை குலைந்து போகாமல், எதிர்காலம் குறித்து திடமான முடிவு செய்யும் பக்குவபட்ட பெண்ணாக Yesterday இருக்கிறாள்."Your body is strong enough to resist the virus" என கூறும் மருத்துவரிடம்.."No,my mind is strong" என்கிறாள்.

எய்ட்ஸ் நோயின்மோசமான விளைவுகளை இத்தனை மென்மையாக சொல்ல இயலுமா என்றிருந்தது. கணவனின் போக்கால் அழகான குடும்பம் சிதைந்து போவதாக காட்டி இருந்தால் இத்திரைப்படம் முழு மதிப்பை பெற்றிருக்காது.மாறாக நோயாளிக்கு தேவையான மன உறுதியை yesterdayயின் மூலம் அழுத்தமாகவே பதிவு செய்கின்றது ஆர்ப்பாட்டம் இல்லாத காட்சிகளின் வழியே.

நோயால் பீடிக்கப்பட்டு ஊர் திரும்பும் கணவனை கவனித்து கொள்ள அவள் எடுத்து கொள்ளும் பிரயத்தனங்கள் கடுமையானவை.முகம் சுளிக்கும் கிராமத்தினரிடம் இருந்து அவனை பாதுகாத்து,கிராமத்திற்கு வெளியே தனியொரு வீட்டை உருவாக்கி கவனித்து கொள்ளும் yesterday ராட்சச பலம் பொருந்திய பெண்ணாக தோற்றம் கொள்வதில் வியப்பில்லை.

கொண்ட உறுதியுடன் மகளை முதல் நாள் பள்ளியில் சேர்க்கும் வரை நோயின் தீவிரத்தை நெருங்க விடாமல் மனவலிமை மிக்க பெண்ணாக Yesterday.வெள்ளந்தி சிரிப்பும் ,உணர்ச்சிபூர்வமான நடிப்புமாய் Yesterdayவாக வரும் லிலிடீயின் நடிப்பு அபாரம்.அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக புகுத்தப்பட்ட காட்சிகளோ..பிரச்சார நெடியோ சிறிதும் இல்லாத கதையமைப்பு.படிப்பறிவில்லாத,மனவலிமை பொருந்திய ஒரு தாயின் உணர்வு பூர்வமான பயணம்.எளிதில் மனதைவிட்டு அகல கூடியவள் அல்ல Yesterday .

Wednesday, January 12, 2011

ஹீப்ரு மொழிச் சிறுகதைகள்

ஹீப்ரு மொழிச் சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பான "Not Just Milk and Honey " யின் தமிழாக்கம் "பூந்தென்றலோ வாழ்க்கை" என்னும் இத்தொகுப்பு. மொழிபெயர்ப்பு கதைகள் தரும் வினோத மனநிலையை சற்று அதிகமாகவே இச்சிறுகதைகளில் பெற முடிந்தது.அறிமுகமற்ற தேசமும்,அதன் மக்களும் கற்பனையில் இயல்பாய் விரிவது மொழிப் பெயர்ப்பின் வெற்றி.இதில் அது சிக்கலின்றி சாத்தியப்பட்டுள்ளது..புலம் பெயர் வாழ்வின் துயரங்களும்,தொடர்ச்சியான அரசியல் மாற்றங்களால் அலைகழிக்கப்படும் யூதர்களின் சோக நிலையும் இக்கதைகளின் ஊடே முன்வைக்கபடுகின்றன.பெரும்பாலான கதைகள் பிரிவின் வாதையோடும், யுத்த காலத்தின் பதற்றத்தோடும் பிரியமானவர்களுக்காய் காத்திருக்கும் சபிக்கப்பட்ட காதலிகளை குறித்தவை.

"....இனப்படுகொலைகள்,போர்,பெரும் அரசியல் மாற்றங்கள் என்று அல்லல்பட்டு வாழ்ந்த காலங்களில் மாற்றமும் அமைதியும் வேண்டி துடித்த துடிப்புகளையும்,ஏற்பட்டு வந்த மாற்றங்களை பிரதிபலித்து,அவற்றை தன்னுள்ளே ஒரே அங்கமாகக் கொண்டு ஹீப்ரு படைப்பிலக்கியம் உருவாகிற்று....."

- முன்னுரையில்


இத்தொகுப்பில் என்னை கவர்ந்த சில கதைகள்..........

"கிளாரா ஷியாதோவின் அழகிய வாழ்க்கை" - யோராம் கனியுக்

ஒரு பெண்ணின் சிறு வயது தொடங்கி மரணம் வரையிலான சம்பவங்களின் அழகிய கோர்வை இக்கதை.இழப்புகளை மட்டுமே கொண்டு நகரும் கிளாராவின் வாழ்க்கை போர் கால பயங்கரத்தின் ஊடே சொல்லப்படுகின்றது.பிரியத்திற்குரிய தந்தையின் மரணம்..கிறிஸ்துவ பாதரியாய் தூர தேசம் போன மகன்..காதலனின் எதிர்பாரா மரணம் ..என தொடர்ச்சியான வருத்தங்களுக்கிடையே அவளை உயிர்ப்பித்து கொண்டிருப்பது சிறுவயதில் அவள் கண்டிருந்த அந்த பசிய பொன் நிற கண்கள்.அந்த கண்களுக்கு உரிமையானவன் சாமுவேல் அபுமென்..சுழற்றி அடித்த வாழ்க்கையின் எஞ்சிய நாட்களை தன் பால்ய சிநேகிதன் அபுமேனோடு கழித்திட தான் கிளாரா அத்தனை துன்பங்களையும் கடந்து வந்திருக்கிறாளோ என்னும் படியான முடிவு.தேர்ந்த நாவலின் குறு வடிவமாகவே இக்கதை தோன்றியது.




"பன்றியை உடைத்தல்" - எட்கர் கீரத்

பொம்மையின் மீது பேரன்பு கொண்ட சிறுவனின் அகவுலகை நேர்த்தியாய் சொல்லும் கதை.வேண்டும் பொம்மைகள் அனைத்தும் எல்லா சிறுவர்களுக்கும் கிடைத்துவிடுவதில்லை.கிடைக்கும் பொம்மைகளிடம் அவர்கள் கொள்ளும் பிரியம்,அவற்றோடு வரிந்து கொள்ளும் அவர்களுக்கே உரித்தான ப்ரேத்யேக உலகம் நாம் உணர்ந்து உட் புக முடியாதது.சிம்சன் பொம்மை வேண்டி,அது கிடைக்காது மாற்றாய் பெற்ற பன்றி உண்டியல் பொம்மையோடு சந்தோஷப்பட்டு கொள்ளும் சிறுவன்,அதன் வருகையையும் விலகலையும் நேரடியாய் நம்முடன் பகிர்கின்றான்.சேமித்து வைத்திருக்கும் பணத்திற்காய் உடை பட போகும் பொம்மையை,தந்தையிடம் இருந்து காக்கும் பொருட்டு அதை யாரும் அறியாமல் வயல் வெளியில் விட்டு வீடு திரும்பும் அச்சிறுவனின் மீது இனம் புரியா பற்றுதல் வருவதென்னவோ உண்மை.

"வெள்ளை" - லீஹ் எய்னி

குற்ற உணர்ச்சியில் உழலும் சராசரி மனிதனின் உணர்வுகளை வெகு அருகில் கண்டடைந்த உணர்வை தரும் இக்கதை இத்தொகுப்பில் குறிப்பிட தகுந்த ஒன்று.சோம்பல் நிறைந்த பகல் பொழுதொன்றில், மன சோர்வில் இருந்து முழுதுமாய் விடுபட முயன்று தோற்கும் தனிமையில் சந்திக்க நேரும் சிறுவனுக்காய் உடைகள் தைக்க ஒத்து கொள்ளும் தையல்காரன் - அச்சிறுவனோடு வரும் பெண்ணிடம் பெரும் உபகாரம் - வெகு நாட்களாய் அவ்வுடையை வாங்க வராத அவர்களுக்காய் காத்திருக்கும் தருணங்கள் - சிறுவனின் மரணம் - வெள்ளை நிறம் ஏற்படுத்தும் மரண பீதி என இக்கதை குறியீடுகளை கொண்டு கலவரமானதொரு மனநிலைக்கு இட்டு செல்கின்றது.

"ஒரு நல்ல இடம்" - ரூத் அல்மோக்

இக்கதை இவ்வாறாக தொடங்குகின்றது..

"ஸிலா கஸ்தான் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவளுடைய வாழ்க்கையில் இரண்டே விருப்பங்கள் தான் உண்டு.ஒன்று அவளது மகன் அரிலாஹ் மற்றது அவளுடைய பாலாலைகா.........."

இவ்விரு வரிகளில் இக்கதை முழுதுமாய் அடங்கி விடும்.தன் பிரியத்திற்குரிய இசைக்கருவியை இசைப்பதில் மகனும் வல்லவன் ஆக வேண்டும் என விரும்பும் தாய்.அவ்விருப்பத்தை தனக்குள்ளே வைத்து அவன் போக்கில் விடுகிறாள்.போரில் சில காலம்,தந்தையின் தோல் தொழிற்சாலையில் சில காலம்,இறுதியாய் நிரந்தரமாய் பிரிந்து தூர தேசம் செல்லும் அரிலாஹ், இசைப்பதை அவள் ஒருபோதும் கேட்டாலில்லை.மகனை நினைத்து மலை மேடுகளில் - வெளிச்சமற்ற வீட்டு முற்றத்தில் - நாடோடி பாடல்களை தன் இசைக்கருவியில் இசைத்து கொண்டே இருந்த ஸிலாவின் பாடல்கள் குறித்தான விவரணைகள் - கவிதை.ஸிலாவின் பிராத்தனைகள் ஏற்று கொள்ளப்படுகின்றன இறுதியாய் - திடீரென தொலைந்து போகும் அரிலாஹ்,பல வருட தேடலுக்கு பிறகு நாடோடி இசைக் கலைஞனாய் கடற்கரையோரம் சுற்றி அலைந்ததாய் அறியப்படுகிறான்.அதனினும் நெகிழ்ச்சியான செய்தி ஒன்றும் இக்கதையில் உண்டு.

"தெருவின் குறுக்கே மோர்கானா" - யெகுடித் ஹென்டெல்


" கதவின் இடைவெளிகளில் நுழைந்து வந்த ஒளி கசங்கிக் கிடந்த படுக்கை விரிப்பிலும் தலையணை மீதும் வெளிறிய கோடுகளை வரைந்தது.படுக்கையில் உட்காரவும் அஞ்சினால்.அவள் முகம் குளிர்ந்து போய் இருந்தது.கன்னத்தில் கவனத்தோடு லேசாக தட்டிக் கொண்டால்.யாருடைய கரங்களில் யார் சுருண்டு கிடந்தது என்பதை நினைத்து பார்க்க முயன்றால்.ஒளி வண்ணத்து பூச்சிகள் படுக்கையில் நடனமாடின.அவள் கைகளிலும்,தோளிலும் தங்க வண்ண ஒளிக்குமிழ்கள் மிளிர்ந்தன..........."

இத்தொகுதியில் எனக்கு மிகப்பிடித்த கதை.எப்போதுக்குமான தேவதை கதைகளை ஒத்திருந்தது காரணமாய் இருக்கலாம்.சில நாட்கள் தன்னோடு இருந்து,பின் சொல்லாமல் விட்டு சென்ற காதலனை(?), எதிர் நோக்கி காத்திருக்கும் யுவதியை குறித்த கதை.காத்திருத்தலின் வலிக்கு நினைவுகளே ஒத்தடம்.அவன் பரிசளித்து சென்ற வெள்ளை நிற,பூ வேலைபாடுகள் கொண்ட குடையுடன் வீதியில் தோன்றும் மோர்கானா - அவன் சார்ந்த நினைவுகளை அசை போட்டபடி - பருவ கால மாற்றங்களில் கூட அக்கறை இன்றி, தான் மேகங்களின் மீது நடப்பதாய் சொல்லி திரிகிறாள். அவனோடிருந்த ஒவ்வொரு நாளும் அவளின் நினைவுகள் வழியே வாசகனுக்கு விவரிக்கபடுகின்றது.நினைவுகளில் மட்டுமே மூழ்கி திளைக்கும் அவளுக்கேயான காதல் கணங்கள்...அற்புதமான கதை.

உலகின் மிகத் தொன்மையான மொழி ஒன்றின் இலக்கியம் எவ்வாறிருக்கும் என்னும் ஆவல் மேலிட வாசிக்க தொடங்கினேன். கொஞ்சமும் ஏமாற்றம் அளிக்காத கதைகள்.யூதர்களின் வாழ்க்கைமுறை,பிரதான தொழில்கள்,யுத்த காலத்தில் சாதாரணர்களின் நிலை,இசை மீது அவர்களுக்கிருந்த அதீத பிரியம் குறித்தான செய்திகள் சுவாரஸ்யமானவை. எல்லா கதைகளின் பின்னணியிலும் ஒரு குரல்,மென் சோக பாடல் ஒன்றை தொடர்ந்து இசைத்தபடி வருவதான மாயை.... ஸிலா கஸ்தானின் பாடலைப் போல,மோர்கானாவின் காதலைப் போல!

தொகுப்பாசிரியர் - ஹயா ஹோப்மேன்
தமிழாக்கம் - த.சித்தார்த்தன்
வெளியீடு - நேசனல் புக் ட்ரஸ்ட்
விலை - 60 ரூபாய்

Sunday, December 12, 2010

நிராயுதபாணியின் ஆயுதங்கள் - ஜெயந்தன் கதைகள்

ஜெயந்தனின் அறிமுகம் கிடைத்தது அசோகமித்ரனின் "தேர்ந்தெடுத்த சிறுகதைகள்" (நேசனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு)தொகுப்பில்.ஜெயந்தனின் "பகல் உறவுகள்" சிறுகதை அதில் இடம்பெற்றிருந்தது.அத்தனை எளிதில் கடந்து விட முடியாத கதை அது.வெளியுலகத்திற்கு ஆதர்சமாய் தெரியும் தம்பதிகளின் நிஜ உலகம் பழிவாங்கலும்,வன்மமும் பீடித்து அலங்கோலமாய் இருப்பதைச் சொல்லும் கதை.புரிதலின் இடைவெளி அதிகரிக்க அதிகரிக்க ஏற்படும் விபரீதங்கள் அழுத்தமாய் முன்வைக்கப்படுகின்றன இக்கதையில்.எதிரியின் பலவீனம் அறிந்து வீழ்த்துவது புத்திசாலித்தனம்,இதுவே கணவன் மனைவிக்கிடையே நிகழுமாயின்?!அவர்கள் படித்தவர்கள். நாகரிகம் கற்றவர்கள்.காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது இங்கே கவனிக்க படவேண்டியவை.தமிழில் முக்கியமான சிறுகதை இது.

அதற்கு பிறகு ஜெயந்தனின் கதைகள் எங்கும் வாசிக்க கிடைக்கவில்லை.தொடர்ந்து அந்த எழுத்தாளனை நினைவில் நிறுத்திக்கொள்ள இச்சிறுகதையே போதுமானதாய் இருந்தது.தமிழில் கவனம் பெறாமல் போன எழுத்தாளர்களுள் ஜெயந்தனும் ஒருவர்.வம்சி வெளியிட்டுள்ள ஜெயந்தனின் மொத்த சிறுகதைகளின் இத்தொகுப்பு நீண்ட தேடலுக்கு பிறகு வாசிக்க கிடைத்தது.நிதானமாய் வாசித்து,ரசிக்கப்பட வேண்டியவர்கள் ஜெயந்தனின் கதை மாந்தர்கள்.தன் இயல்போடு இருந்து நம்மை பதற்றம் கொள்ள செய்பவர்கள்.மேலும் சமூகத்தின் மீதான கோபத்தை தன் கதைகளில் வெளிக்காட்ட கொஞ்சமும் தயங்கவில்லை இவர்.




இத்தொகுப்பில் மிகப்பிடித்த சில கதைகள் குறித்து இங்கே..

"வெள்ளம்",பெரு மழை நாளொன்றில் தன் வயலில் தனித்திருக்கும் நாயகன் , மழைக்கு ஒதுங்கும் அக்கிராமத்து பெண்களால் அலைக்கழிக்கபடும் கதை.பெண்கள் தான் எத்தனை வசீகரமானவர்கள்..ரகசியங்களின் குடுவை...விடை அறிந்து கொள்ள முடியாத புதிர் விளையாட்டில் எப்போதும் வெற்றி பெறுபவர்கள்.சிறுமி,பேரிளம்பெண்,புதிதாய் திருமணம் ஆனவள் என அவ்விடம் இருக்கும் ஒவ்வொருத்தியும் மாறி மாறி தேவதை கோலம் பூணுகின்றனர்,அவன் தனிமை புலம்பல்களுக்கும்,சிந்தனைகளுக்கும் உரம் போட்டபடி.மழை விட்டதும் பெண்கள் யாவரும் சென்று விட,சட்டென தோன்றிய வெறுமையை அவன் மேகத்தின் துணை கொண்டு வரவேற்பதோடு முடிகின்றது கதை.ஆணின் அகவுலகை - தனிமை துயரை இத்தனை நெருக்கமாய் வாசகனுக்கு வேறெந்த கதையும் முன்வைத்தாய் நினைவில்லை.

"துப்பாக்கி நாயக்கர்",தன் மனைவியை பெண்டாள முயன்ற வேலையாளின் துரோகத்தை,ஊரார் முன் ஏற்பட்ட அவமானத்தை கடக்க நிதானிக்கும் முன் நிகழும் அவனின் தற்கொலை - என சுழற்றி அடிக்கும் சூழலில்,இயல்பிற்கு மாறாய் நடந்து கொள்ளும் துப்பாக்கி நாயக்கரின் நிதான புத்தி அவ்வூராரோடு நம்மையும் ஆச்சர்யம் கொள்ள செய்வதே.பேச்சை காட்டிலும் மௌனத்திற்கு வீரியம் அதிகம்.சமயங்களில் எல்லா உணர்ச்சிகளும் அதில் அடங்கி விடுவதுண்டு. சகித்து கொள்ள இயலாத துரோகத்தை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இக்கதை நேரடி உரையாடல் அதிகம் இன்றி காட்சிகளின் விவரிப்பில் நமக்கு உணர்த்துபவை ஏராளம்.

"உலகம் தன்னை அதட்ட தெரிந்தவர்களின் ஆணைக்குத்தான் அடி பணிகிறது.அறையத் துணிந்தவர்களிடம் தான் அதிகாரத்தை ஒப்படைக்கிறது.நீ அடிமை என்று முகத்துக்கு நேரே கை நீட்டத் தெரிந்தவர்களுக்குத் தான் சிம்மாசனம் தருகிறது"

- ஜெயந்தனின் 'சம்மதங்கள்' சிறுகதையில்


"வாழ்க்கை ஓடும்",ராஜேந்திர சோழனின் சிறுகதை ஒன்றை நினைவூட்டிய கதை இது.பகல் முழுக்க அடித்து கொள்ளும் மருமகள் - மாமியார்,தொடர்ச்சியான வசைகளில் அக்கம்பக்கத்தாரை குளிர்வித்துவிட்டு,வீடு வந்து சேரும் ஆணிடமும் தங்கள் நியாயத்தை சொல்லி மேலும் கொஞ்சம் களேபரம் செய்து முடங்கி போகின்றனர்.மறுநாள் வெளியூருக்கு நாட்கணக்கில் கூலி வேலை செய்ய அவன் புறப்பட...முன்னிரவில் நடந்த கலவரத்தின் சுவடே தெரியாது மகிழ்ச்சியாய் அவனை வழி அனுப்பி வைக்கின்றனர்.அவர்கள் அப்படிதான், அவர்களின் அன்றாடம் அது..அடித்து கொள்வதும்,சேர்ந்து கொள்வதும்..எனக்கும்,உனக்கும், எல்லோருக்குமான வாழ்க்கை அப்படிதான் என்பதை போல!

"மீண்டும் கடவுளும் கந்தசாமியும்",புதுமைபித்தனின் ஓவியத்திற்கு நவீன வண்ணம் பூசும் முயற்சி.கந்தசாமிபிள்ளையை சினிமா தயாரிப்பாளராக்கி/குடிசை வீட்டை கோபுரமாக்கி....கடவுளுக்கு தொடர்ச்சியான ஆச்சர்யங்கள் இம்முறை."ஊமை ரணங்கள்", திருமண சடங்குகளுக்காய் மகளிடமே கையேந்த நேரிடும் ஏழை தந்தையின் கதை.சில அவமானங்களை வலிந்து ஏற்று கொள்வது கொடுமை.கதை.மோசமானதொரு சமூக சூழலை/மாற்றம் காணாது தொடரும் திருமண கொடுக்கல் வாங்கல்களை சாடும் இக்கதை எந்த காலகட்டத்திற்கும் பொருந்திப் போவது.

"நாலாவது பரிமாணம்",இக்கதையின் முடிவில் உடன்பாடில்லை.கொஞ்சம் சினிமாத்தனமாய் தோன்றியது.இருப்பினும் பள்ளி ஆசிரியர்களான நாயகன் மற்றும் நாயகிக்கு இடையே தோன்றி,படரும் காதல்,வெகு இயல்பான உரையாடல்களோடு சொல்லப்பட்டிருக்கும் பாணி அருமை. தொடர்ச்சியான அவர்களின் உரையாடல்கள் இட்டு செல்லபோகும் இடம் எதுவென வாசகன் அறிந்திருந்தும், உடன் சேர்ந்து பயணிக்கும் சுவாரஸ்யம் குறையவில்லை.

"பைத்தியம்","மாரம்மா",எழுதியவனும் படித்தவளும்",ஜாதி மான்" ஆகியவையும் குறிப்பிட தக்கவையே.நம்மை குறித்த,நமக்கான கதைகள் இவை.அலங்காரமற்ற வர்ணிப்புகள்.வாசகனை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் எதார்த்தங்களின் சித்தரிப்பு.கொஞ்சம் காத்திரமான குரலில் சமூகத்தை சாடும் கதைகளில் தெரிவது எழுத்தாளனின் கோபமும் அக்கறையும்.தொடர்ச்சியாய் முன்வைக்கப்படும் மாற்று கருத்துக்களில் நம்மை சுய பரிசோதனை செய்து கொள்ள தூண்டும் கதைகள் இவை.

"நிராயுதபாணியின் ஆயுதங்கள்",தமிழ் சிறுகதை தொகுதிகளில் மிக முக்கியமானதொன்று.

வெளியீடு - வம்சி
விலை - 400 ரூபாய்

Tuesday, November 30, 2010

எஸ்.ராவின் "பேசத்தெரிந்த நிழல்கள்"

நாவலையும்,சினிமாவையும் முறையே வாசகனுக்கும்,பார்வையாளனும் அணுகும்/அணுக வேண்டிய முறை குறித்து இக்கட்டுரையில் வாசித்த வரிகள் சத்தியமானவை.

இலக்கியத்தை வாசிப்பவர்கள் சொற்களின் வழியே ஒரு பிம்பத்தை தாங்களாகவே கற்பனை செய்து கொள்கிறார்கள்.அதில் காட்சிபடுத்துதல் தான் வாசகனின் வேலை.அதே நேரம் சினிமாவோ காட்சிகளை முன்வைக்கிறது.அதை தனது மனதிற்குள் சொற்களாக, நினைவுகளின் பகுதியாக மாற்றிக் கொள்வதை பார்வையாளர்கள் செய்கிறார்கள்"

திரைப்படங்கள்/நடிகர்கள் குறித்த தங்களின் விரிவான பார்வையாய் தமிழில் தொடர்ந்து முன்வைப்பவர்கள் எஸ்.ராவும் சாருவும்.என்னளவில் சாருவின் "தீராக்காதலி"(கே.பி சுந்தராம்பாள்)தொகுப்பு முக்கியமான ஒன்று.ரேயின் "பதேர் பாஞ்சாலி" குறித்த எஸ்.ராவின் 'பதேர் பாஞ்சாலி - நிதர்சன புனைவு" ,ஒரு திரைப்படத்தை மட்டுமே மையமாக கொண்டு தமிழில் வெளிவந்த முதல் நூல் என நினைக்கின்றேன்.நல்ல சினிமாவை,மறக்கடிக்கப்பட்ட நடிகர்களை தம் வாசகர்களுக்கு முன்னெடுத்து செல்லும் இம்முயற்சிகள் இப்பொழுது பரவலாய் காணப்படுவது மகிழ்ச்சிகரமானது.

எஸ்.ராவின் இந்த தொகுப்பு,முழுக்க முழுக்க ஒரு பார்வையாளனின் அவதானிப்பில் தமிழ்,மலையாளம் தொடங்கி உலகளவில் தான் ரசித்த திரைப்படங்கள்,குறும்படங்கள், விருப்பத்திற்குரிய நடிகர்கள்,நேர்காணல்கள் என தகவல்களை பகிர்ந்து கொண்டே செல்கின்றது.




சாவித்திரி,நடிப்பு ராட்சசி.நவராத்திரி திரைப்படத்தில்,மேடை நாடக காட்சியில்..முகத்தை வெட்டி,சிவாஜியிடம்,"அதாகப்பட்டது சுவாமி........." என கூறும் ஒரு காட்சி போதும் அவர் சிறப்பை பகிர.இத்தொகுப்பில் சாவித்திரி குறித்த கட்டுரையை(சாவித்திரி - இரண்டு பிம்பங்கள்) வாசித்து கொண்டிருக்கும் பொழுது,வைகை எக்ஸ்ப்ரஸ்ஸில் அருகில் அமர்ந்திருந்த பெண்மணி புத்தகத்தை வாங்கி ஆர்வமாய் அதை மட்டும் படித்துவிட்டு திருப்பி தந்தார்.கூடவே சாவித்திரி குறித்து தனக்கு தெரிந்த செய்திகளை சொல்லி கொண்டே வந்தார் சோகத்துடன்.அந்த நடிகையின் இறுதி நாட்கள் குறித்த உருக்கமான கட்டுரை அது.

"சிரித்தால் மட்டும் போதுமா?",நடிகர் நாகேஷை குறித்த இக்கட்டுரை அந்த மாபெரும் கலைஞன் குறித்த தகவல்களோடு அவருக்கு மறுக்கப்பட்ட அங்கீகாரம் குறித்தும் பேசுகின்றது. விருதுகளுக்கும் மேலான சிறப்பு ரசிகனின் வரவேற்பே.தருமியும்,செல்லப்பாவும் எளிதில் மறக்க கூடியவர்கள் அல்லவே!மொழி கடந்து சில நடிகர்கள் எளிதில் கவர்ந்து விடுவார்கள்.மலையாள நகைச்சுவை நடிகர்கள் ஜெகதி, ஜகதீஷ்,இன்னொசன்ட் எப்போதும் என் விருப்பதிற்குரியவர்கள்.ஜெகதியும்,இன்னொசென்ட்டும் இல்லாத படங்களே இல்லையா என்று கூட தோன்றும்.இத்தொகுப்பில் "நகைச்சுவை நாயகன்" கட்டுரை ஜெகதி குறித்தானது.

ராஜாவின் திருவாசகம்,முதன்முதலில் கேட்டது ஒரு இரவில்.ராஜாவை அதிகமாய் பிடித்து போன தருணங்களில் அதுவும் ஒன்று."எத்தனை கோபுரங்கள் இருந்தாலும்,தஞ்சை கோபுரம் தனித்துவமானது,ராஜாவும் அது போலவே" என்ற இயக்குனர் பாசிலின் வரிகள் நினைவிற்கு வருகின்றது.திருவாசக இசையில் கரைந்து உருகிய தருணங்களை பதிவு செய்கின்றது "திருவாசகம் கேட்ட பொழுது" கட்டுரை.(ராஜாவின் பாடல்கள் குறித்து விரிவாக எழுத வேண்டும்..எப்பொழுதிற்குமான இசை).

"Wind Migration " மற்றும் "The Forgotten Woman " ஆகிய இரு ஆவணப் படங்கள் குறித்த தகவல்கள் பார்க்கும் ஆவலை தூண்டுபவை.Wind Migration ஆவணப்படத்தின் பல பகுதிகள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன.பறவைகளின் தீரா பயணத்தில் கொஞ்சம் நாமும் உடன் பயணிக்கும் சுவாரஸ்ய அனுபவம்."The Forgotten Woman ",மதுரா நகரில் தனித்து விடப்பட்ட விதவைகளை குறித்தது.உணவிற்கும்,இருப்பிடத்திற்கும் வழியின்றி எஞ்சிய நாட்களை விதியின் வசம்விட்டு தொடர்ந்து கொண்டிருக்கும் அவர்களின் நிலை குறித்த இப்படத்தை இயக்கியிருப்பவர் திலீப் மேத்தா(தீபா மேத்தாவின் சகோதரர்).

மதுரை இருந்த நாட்களில் உலக சினிமா பார்ப்பதென்பது ஏழு கடல்,ஏழு மலை தாண்டி அடைய வேண்டிய காரியம் என்றிருக்கும்.ஹாலிவுட் படங்கள் குறித்து மட்டுமே அறிந்திருந்த காலம் அது.இணைய அறிமுகத்திற்கு பிறகு அதிகமாய் உலக சினிமா குறித்து அறிமுகம் கிடைத்தது எஸ்.ரா மற்றும் சுரேஷ் கண்ணனின் "பிச்சைபாத்திரம்" வலைத்தளங்களின் வழியே.தேசத்திற்கு தேசம் வேறுபடும் கலாசாரத்தையும்,வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள திரைப்படங்களை தவிர்த்து வேறு எளிமையான வழியிராது.அவ்வகையில் இத்தொகுப்பில் கோடிட்டு காட்டப்படும் ஆசிய/பௌத்த/வியட்நாமிய திரைப்படங்கள் எண்ணற்றவை.

ஹாலிவுட் திரைப்படங்களில் இருந்து பிற தேச திரைப்படங்கள் வேறுபடம் விதம் குறித்தும்,திரைப்பட வகைகள் குறித்தும் விரிவாய் அலசும் "ஆசிய - சினிமாவின் குவிமையம்'கட்டுரை முக்கியமான ஒன்று.மேலும் ஒரு குறிப்பிடதக்க பதிவு,அகிராவுடன் இரானிய இயக்குனர் அப்பாஸ் கிராஸ்தமியின் உரையாடல்.தொழில்முறை நடிகர்கள்,சர்வதேச விருதுகள்,மிகை நடிப்பு,தற்கால சினிமா குறித்தான அகிராவின் பார்வையை முன்வைக்கும் கட்டுரை.

இத்தொகுப்பின் கட்டுரைகள் சினிமாவை அணுகும் முறை குறித்தோ,அதன் நுணுக்கங்கள் குறித்தோ நமக்கு பாடம் சொல்லுபவை அல்ல.மாறாக அனுபவ வாயிலாக அறிமுகங்களை தந்து, நம் நினைவுகளையும் மீட்டெடுக்கும் முயற்சி.சினிமாவின் மீது தீராக்காதல் கொண்டவர்கள் தவறவிடக் கூடா வாசிப்பு!

வெளியீடு - உயிர்மை

Monday, November 8, 2010

The Day I Became A Woman (2000)

ஒரே நாளில் நிகழும் மூன்று வெவ்வேறு நிகழ்வுகளின் தொகுப்பு.ஒரு சிறுமி,ஒரு நடுத்தரவயது பெண்,ஒரு மூதாட்டி - தங்களை அடையாளம் கண்டு கொள்ள நேரிடும் ஒரு நாளை குறித்த மூன்று தனிக்கதைகள்.முதல் முறை சுதந்திரம் முடக்கப்படும் பொழுது எழும் கேள்விகள்,விருப்பங்களுக்கு தடை ஏற்படும் பொழுது அதை மீறி வென்றிட நடத்தும் போராட்டம்,பிடிதமானதொரு வாழ்வை இறுதி நாட்களில் கண்டெடுத்து அடையும் மகிழ்ச்சி,இவற்றை இப்பெண்களின் வாழ்வில் ஒரு நாள் நிகழ்வின் மூலம் பார்வையாளனுக்கு சிறப்பாய் கொண்டு சேர்ந்திருக்கிறார் இரானிய பெண் இயக்குனர் மர்சீ மெஷ்கினி.




முதல் கதை, ஹவா என்னும் சிறுமி தனது ஒன்பதாவது பிறந்த நாளின் பொழுது அம்மாவாலும்,பாட்டியாலும் இனி நீ ஒரு பெண் என போதிக்கப்படுகிறாள். சதோர் எனப்படும் கருப்பு அங்கியை அணிந்து கொள்ள அதுவே சரியான நாள் என தீர்மானம் ஆகின்றது.ஆண் நண்பர்களோடு விளையாடவும்,வெளியே செல்லவும் தடை விதிக்கப்படுகின்றது."நேற்று வரை விளையாடி கொண்டுதானே இருந்தேன்" என அவள் கேட்கும் இடம்...சொல்வதற்கு ஒன்றும் இல்லை.நீண்ட போராட்டத்திற்கு பிறகு பகல் 12 மணிவரை விளையாட அனுமதி பெற்று நேரத்தை கணிக்க குச்சியை எடுத்து கொண்டு வெளியேறுகிறாள்.வெகு இயல்பாக வந்து விழும் கேள்விகளும்,நிகழும் மாற்றங்களை புரிந்து கொள்ள முடியாத சிறுமியின் மனநிலையை அழகாய் பிரதிபலிக்கும் பகுதி இது.

இரண்டாவது கதை - கணவனின் எதிர்ப்பை மீறி சைக்கிள் பந்தயத்தில் பங்கு கொள்ளும் ஆஹு என்னும் பெண்ணை குறித்து.இக்கதை முழுதும் பந்தைய களத்திலேயே நடிக்கிறது.எத்தனையோ பெண்களோடு பந்தயத்தில் பங்கு கொண்டிருக்கும் ஆஹூவிடம் அவளது கணவன் அதை விடுத்து வீடு வருமாறு வற்புறுத்துகிறான்.விவாகரத்து செய்து விடுவேன் எனவும் மிரட்டுகிறான்...மத குருவை அழைத்து வந்து விவாகரத்தும் செய்கின்றான்..எதையும் கண்டுகொள்ளாமல் இறுக்கமான மனநிலையில் போட்டியில் வெற்றி பெற தொடர்ந்து சைக்கிள் ஒட்டி செல்லும் ஆஹு தனது சகோதரர்களால் பாதி வழியில் சைக்கிள் பிடுங்கப்பெற்று தனித்து விடப்படுவதோடு முடிகின்றது இக்கதை.மத ரீதியான கட்டுபாடுகள் நியாயமான விருப்பங்களுக்கு இடையூறாய் வந்தால் அதை துணிந்து எதிர்கொள்ளும் மனநிலை கொண்டிருப்பவர்கள் பெண்கள் என்பதை சொல்லுவதான கதை.மூன்று கதைகளில் அழுத்தம் மிகுந்தது இதுவே.



மூன்றாவது கதை - தான் அனுபவித்து அறியாத சொகுசான வாழ்கையை இறுதி நாட்களில் சாத்தியப்படுத்திட நினைக்கும் மூதாட்டி ஹூரா,வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்கள் அத்தனையையும் கூலிக்கு சிறுவர்களை வைத்து கொண்டு வாங்கி தன் நகரம் நோக்கி பயணிக்கின்றால். அத்தனை சுவாரஸ்யமான பகுதி இல்லை இது..இருப்பினும் ஹூரா கிளம்பும் முன்னர் அவள் சந்திக்கும் இரண்டு பெண்கள்,ஆஹூவை குறித்து அவளிடம் சொல்லுகின்றனர்,அத்தனை எதிர்ப்பை மீறி அவள் சைக்கிள் பந்தயத்தில் பங்கு கொண்டதும்,சகோதரர்களால் சைக்கிள் பிடுங்கப்பட்டு பந்தய களத்தில் தனித்து விடபட்டாலும் அவள் வாடகைக்கும் சைக்கிள் பெற்று அதில் வெற்றி அடைந்துவிட்டாள் என அவர்கள் பேசி கொள்வது பெருத்த நிம்மதி அளிக்கும் செய்தி.இரண்டாம் கதையின் வெற்றியும் அதுவே.

தான் வாங்கிய பொருட்களை படகில் ஏற்றி கொண்டு செல்லும் ஹூராவை பார்த்தபடி சிறுமி ஹவா நிற்பதோடு முடிகின்றது இத்திரைப்படம்.ஆஹூவை போல போராட்ட குணமும்,ஹூராவிற்கு இறுதி நாட்களில் கிடைத்த மகிழ்ச்சியும் நிறைவும் இனி வாழ்க்கையை தொடங்க போகும் சிறுமி ஹவாவிற்கு சாத்தியம் ஆகுமா என்கிற கேள்விகள் தொக்கி நிற்பதென்னவோ உண்மை.தீவிரமான பெண்ணிய கருத்துக்களை வெளிப்படையாக பேசும் இத்திரைப்படம் இரானில் சிறிது காலம் தடை செய்யப்பட்டுள்ளது.மத ரீதியான கட்டுபாடுகளை விலக்கி பார்த்தால் இத்திரைப்படம் எல்லா தேசத்து பெண்களும் பொருந்தி வருவதே.

Monday, November 1, 2010

அ.முத்துலிங்கத்தின் "வியத்தலும் இலமே"

"வியப்பு தான் மனிதனை வாழ வைக்கிறது.எப்பொழுது ஒருத்தர் வியப்பதை நிறுத்திவிடுகிறாரோ அப்பொழுதே அவர் வாழ்வதை நிறுத்தி விட்டார் என்று தான் நினைக்கின்றேன்"

- அ.முத்துலிங்கம்


இத்தொகுப்பை வாசிக்க தொடங்கிய சில நிமிடங்களில், தமிழின் அபூர்வ நூல் ஒன்றை வாசித்து கொண்டிருக்கின்றேன் என்ற எண்ணம் தோன்றியது.உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் உடனான நேர்காணல்களின் தொகுப்பிது.சமகால உலக இலக்கியத்தை அறிமுகம் செய்து கொண்டே செல்கின்றன ஒவ்வொரு கட்டுரையும்.மொழிபெயர்ப்பல்லாமல் உரையாடல்களின் நேரடி தமிழ் பதிவு. வாசகனாய் மட்டுமே தன்னை முன்னிறுத்தி எழுத்தாளர்களோடு கொண்ட உரையாடல்களை தொகுத்திருக்கும் அ.முவின் இம்முயற்சி ஆச்சர்யம் அளிப்பது.வாசிப்பின் மீதான தீராக்காதல் மட்டுமே காரணமாய் இருக்கவேண்டும்....நிச்சயமாய் அது மட்டுமே!

சிறுகதை - நாவல் வடிவம்,வாசிக்க விரும்பும் நூல்கள்,எழுதும் முறை,பதிப்பாளர்களுடனான உறவு குறித்தான கேள்விகள் பொதுவாக எல்லா நேர்காணலிலும் கேட்கபடுபவையாக இருக்கின்றன.பதில்களில் தான் நமக்கு ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன.

"The Devil that danced on the water" நாவலின் அசிரியர் அமினாட்டா போர்னோ தமக்கு பிடித்த நூல் என அகராதியை கூறுகின்றார்."கொலம்பஸ் ஒரு நாட்டை கண்டுபிடித்தது போல ஒவ்வொரு புது வார்த்தையும் எனக்கு பெரிய கண்டுபிடிப்பு தான்" என்கிறார்.இத்தொகுப்பில் பல எழுத்தாளர்களால் பரிந்துரைக்கப்படும் புத்தகம் "An Obidient Father",இதன் ஆசிரியர் புலம் பெயர்ந்த இந்தியர் அகில் ஷர்மா.இந்திய அரசியல் பின்னணியில் நிகழும் இந்நாவல் கொண்டாடப்படுவதற்கு, அதிர்ச்சி மதிப்பீட்டிற்கு மீறிய காரணங்கள் உள்ளன என உணர நாவல் குறித்த சிறு அறிமுகம் உதவுகின்றது. பல்லாயிரம் டாலர் சம்பள வேலையை விடுத்து முழு நேர எழுத்தாளராய் இருப்பவர் இவர்.


இத்தொகுப்பில் எழுத்தாளர்கள் அல்லாத வேறு சில சுவாரஸ்ய மனிதர்களும் உண்டு.பறவையியல் விஞ்ஞானி கிரிஸ் பிலார்டி உடனான சந்திப்பை சொல்லலாம்,அபூர்வ பறவைகள் குறித்தும்,முற்றிலும் அழிந்து போன பறவை இனங்கள் குறித்தும் தொடரும் உரையாடல்கள் ஒரு நிமிடம் நாமும் அவர்களோடு அந்த பறவை கூடத்தில் நின்று கொண்டிருப்பதான பிரம்மிப்பை தருகின்றது.



"ஒரு விஞ்ஞானக் கதை உங்கள் அறிவை தூண்ட முடியும் அல்லது எதிர்பாராத ஒரு மூளை அதிர்ச்சியை தர முடியும்.ஆனால் இலக்கியம் என்று நீங்கள் அழைக்க வேண்டுமானால் அது உணர்வுபூர்வமாக உங்களை தொட வேண்டும்"

-- டேவிட் பெஸ்மொஸ்கிஸ்


திருக்குறளோடு ஆரம்பமாகும் அத்தியாயங்கள் கொண்ட ஆங்கில நூல் இருக்குமென நாம் நினைத்திருக்க சாத்தியங்கள் இல்லை."Cinnamon Gardens" என்னும் அந்நூலை எழுதி இருக்கும் ஷியாம் சுந்தர் சிங்கள எழுத்தாளர். தமிழ் பேசவோ, எழுதவோ தெரியாத இவர் திருக்குறளை தேர்ந்தெடுத்ததற்கு சொல்லும் காரணங்கள் சுவாரஸ்யமானவை.அனிதா தேசாயின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு எழுத தொடங்கியதாய் கூறுகின்றார்.அனிதா தேசாயின் "கடற்புரத்து கிராமம்"மட்டுமே வாசித்திருக்கிறேன்,வருடங்கள் பல கடந்தும் இன்னும் அந்நாவலின் மனிதர்கள் ஹரியும்,பேலாவும்,கமலாவும் மனதில் இருக்கிறார்கள்.

கடிகாரம் அமைதியாய் எண்ணி கொண்டிருக்கின்றது தொகுப்பில் படித்ததில் பிடித்தது என அ.மு பகிர்ந்திருக்கும் நூல் "Teacher Man". ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்ற ப்ரான்க் மக்கொர்டின் சுயசரிதை நூல் இது.நகைச்சுவையும்,ஒளிமறைவு அற்ற இவரின் எழுத்து குறித்தும் அந்த கட்டுரையில் வாசித்திருந்தது நினைவில் இருந்தது.வாசித்தே தீரவேண்டிய பட்டியலில் "Teacher man " நூலை சேர்க்க கூடுதலான தகவல்கள் இக்கட்டுரையில் உள்ளது.எழுத்தில் இருக்கும் வசீகரமும்,நகைச்சுவையும் எழுத்தாளனிடம் எதிர்பார்ப்பது தவறு என்பதை சொல்லும் விதமாய் இக்கட்டுரை இவ்வாறாக முடிகின்றது.

"ஒரு எழுத்தை படைத்தவரை சந்திக்காமல் இருப்பதே உத்தமம் என பல சமயங்களில் தோன்றும்.இனிமேல் மக்கோர்டை எங்கு சந்தித்தாலும் அவர் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் செல்வேன்.அவர் புத்தகங்கள் எங்கு கண்டாலும் வாங்குவேன்"

காம இலக்கியம் படைக்கும் மேரி ஆன் ஜான் புலம் பெயர்ந்த சிங்களத்தவர்.தனது டைரி குறிப்புகளை இணையத்தில் தொடர்ந்து பகிர்ந்து வரும் இவரின் நாவல் "Bodies in Motion ", மிக நுணுக்கமான விஷயங்களை தயக்கமின்றி பகிர்ந்து கொள்கின்றார். குழந்தையின் உற்சாகத்தோடு இவர் பேசி இருப்பதாய் தோன்றியது.யாழ்ப்பான அப்பம் குறித்து இருவரும் பேசி கொள்ளும் இடம் அதை உறுதி செய்தது.

கிரேக்க புராணம் ஒன்றை (ஓடிசி) மீள் ஆராய்ச்சி செய்யும் மார்கரெட் அட்வூட்டின் "Penelopiad " நாவல் குறித்த விஸ்தாரமான அறிமுகம் பெனிலோப்பே என்னும் கிரேக்க இலக்கிய பாத்திரத்தின் மீதான மதிப்பை கூட்டுவது.புராணம் ஓடிசியசை பிரதானப்படுத்தி இருந்தாலும்,அவன் மனைவி பெனிலோப்பேவை முன்னிறுத்தி எழுதபட்டிருக்கும் இப்பெண்ணிய நாவலில் வருவதான இவ்வரிகள் என்னை கவர்ந்தன.


"நீ ஒரு தண்ணீர் பெண்.தண்ணீர் எதிர்ப்பதில்லை ,உன்னுடைய கைகளை அதற்குள் விட்டால் தழுவிக்கொள்ளும்.அது சுவர் அல்ல,உன்னை தடுக்காது.தடங்கல் ஏற்பட்டால் தாண்டி போகும். தண்ணீர் பொறுமையானது.ஒரு கல்லை கூட துளைத்துவிடும்"


வெகு சில எழுத்தாளர்கள் குறித்து மட்டுமே பகிர்ந்துள்ளேன்.தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட் உடனான நேர்காணல் குறித்து தனி கட்டுரையே எழுதலாம்.முதல் ஆச்சர்யம் தமிழ் மீதான இவருக்கு உண்டான ஆர்வம்..சங்க இலக்கியம் தொடங்கி சமகால தமிழ் இலக்கிய சூழல் வரை தோய்வின்றி பேசுகின்றார்.செம்மொழி மாநாட்டில் வரவேற்புரை நிகழ்த்தியது இவர் தான்.

உலக இலக்கியங்கள் குறித்த பேச்சின் ஊடே புதுமைப்பித்தனும், எஸ்.ராவும்,ஜெமோவும் அதை ஒத்த படைப்புகளுக்காய் கோடிட்டு காட்டப்படுவது நிறைவு.ஒவ்வொரு எழுத்தாளரையும் சந்திக்க எடுத்து கொண்ட முயற்சிகள்,எதிர் கொண்ட இடர்பாடுகள்,குறித்து வாசிக்க வாசிக்க வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது!!அவரவர் படைப்பு சார்ந்த கருத்தாளமிக்க உரையாடல்கள்,எத்தனை தீவிர வாசிப்பு தேவைப்பட்டிருக்கும் இது சாத்தியமாக. குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள் வாசிப்பதற்கு போதுமான நூல்கள் இத்தொகுப்பில் பரிந்துரைக்கபடுகின்றன.தமிழில் ஆக சிறந்த முயற்சி.தவிர்க்க கூடா வாசிப்பும் கூட.

வெளியீடு - காலச்சுவடு
விலை - 125 ரூபாய்